Thursday, January 10, 2013

இருபத்தேழு வயது குழந்தையின் உருக்கமான பிரார்த்தனை…



கன்னாபின்னாவென்று ஓடித்திரிந்து
கண்ணாம்பூச்சி  விளையாடிய நாட்கள்
தொலைத்துவிட்டு தவிக்கிறோம்..
மதிய சாப்பாடு சத்துணவு வாசம்
இன்னும் எங்கள் மூக்குகளில் வாசம் செய்கிறது..
கபடி விளையாட போட்ட கோடுகளை
சுவடு தெரியாமல் அழித்தது யாரோ?
அத்தாவிடம் பொய் சொல்லி மதியம்
தூக்கம் மறந்து ஹை ஸ்கூல் மைதானம்
எங்களுக்கு எப்போதும் அடைக்கலம்
பட்டாம் பூச்சிகளும் தட்டான்களும்
எங்களுக்கு செல்ல பிள்ளைகள்
ஓடிபிடித்து விளையாட்டுகளில்
தொலைந்த எங்களை தேடும் எங்கள் பெற்றோர்கள்
கணக்கில்லாமல் காகிதக் கப்பல்கள்
எங்கள் புத்தகங்களின்  இறுதிபக்கங்கள்
ஒழுகிய வீட்டில் கவலை இல்லாமல்
மழையோடு கும்மாளம்
அழுக்கான எங்கள் சட்டைகளை
துவைத்தே உலர்ந்து போன எங்கள் அம்மா..
நல்லா படிச்சு பெரிய வேலைபார்கனும்னு
எல்லா நேரமும் சொல்லும் எங்கள் அத்தா..
பம்பரம், பளிங்கி, கிட்டிபுள், கெல்டாபில்ட்
கிரிக்கெட் மட்டை என்று எங்களுக்கேயான
எங்கள் பழைய சொத்துக்கள்
அவற்றை தேடி இப்போது ஓடும்
எங்கள் மனது
சுருங்கிப்போன சட்டையோடு
எப்போதும் ஊர் சுற்றும் எங்களுக்கு
சலவை செய்த  சட்டைகள் இன்று..
அழுக்கான எங்கள் உள்ளங்கள்
நாளை என்று எதையும் மிச்சமில்லாமல்
வாழ்ந்த எங்கள் நாட்களையும்
எனது என்று இறுமாப்பு இல்லாமல்
தன்னிறைவோடு வாழ்ந்த அந்த காலங்களையும்..
இப்போது எண்ணி ஓடுகிறேன்..
என்னை மீண்டும் குழந்தை ஆக்கி விடு இறைவா..
என் அத்தாவிடம் மீண்டும் அடி வாங்க வேண்டும்.
என் அம்மாவிடம் சோறு ஊட்டிக்கொள்ள வேண்டும்..
எங்கள் பழைய ஒட்டுவீட்டில் பழைய சோறு உண்ண வேண்டும்..
ஆரஞ்சு பழ மிட்டாய் ஆளுக்கொரு ரூபாய்க்கு
நானும் என் தம்பியும்..
விளையாடிகொண்டே சப்பி சுவைத்த நாட்கள்..
நேரமாகி வீட்டுக்கு செல்கைகையில் லேசான பயம்..
கடற்கரைக்கு போனதற்காய்.. எங்களை
கட்டிபோட்டு அடித்த எங்கள் தந்தை..
எங்கள் அழுகையால் அடியை நிறுத்துவதற்காய்
இனிமேல் போக மாட்டேன்னு சொல்லுஎன்று
சொல்லி கொடுத்து அடியை நிறுத்திய நாட்கள்..
தேன்கூடு கலைத்து பூச்சிகளால் கடிவாங்கியது அன்று
வலியோ எங்கள் மனதில் இன்று
முதல் ரேங்க் வாங்கலன்னா அத்தா
சுல்லிகுச்சியால் அடிக்கும் என்று துவா செய்து
படித்த அந்த நாட்கள்.. Ignore warning
மூணு ரூபா காசு சேந்தால் உடனே
இங்க பேனா வாங்கி எழுதிபார்த்த நாட்கள்..
சார் படம் வரைய சொன்னாருன்னு
வீடு முழுதும் கிறுக்கிய அந்த கிறுக்கல்கள்….
இது அத்தனையும் அப்படியே
வேண்டும் தயவு செய்து
தருவியா இறைவா..
இருபத்தேழு வயது குழந்தையின்
உருக்கமான பிரார்த்தனை

No comments:

Post a Comment